அடியேனுடைய இருபத்து ஐந்தாம் பாடல்

கோபால நாமம் வாழி!

நாரணா வாழ்க! நால்வேத பொருளே வாழ்க!

காரணா வாழ்க! கார்மேனிச் செம்மலே வாழ்க!



இன்னுயிரில் கலந்த எம் மன்னவா வாழ்க!

இம்மை எனை ஆட்செய்யும் இராகவா வாழ்க!



தென் துவாரகை யாளுங் கோவே வாழ்க!

தெளிந்த நீரின் அருங் குணமே வாழ்க!



அரவு மீதயர்ந்த மலர் மார்பா வாழ்க!

அகத்தினி லமர்ந்த ஒளிச் சுடரே வாழ்க!



பல்லாண்டு கேட்டருளும் திருச் செவிகள் வெல்க!

பகையோரைப் பந்தாடும் பொற் கோலும் வெல்க!



ஈருலக மளந்த நின் திருவடிகள் வெல்க!

ஈடற்ற மரகதத்  திரு மேனி  வெல்க!


வெண்ணெய் களவாடிய நின் பொற்கரங்கள் வெல்க!

வெம்மை தீர்த்தருளும் நனி வதனம் வெல்க!



வலமாய் வள மருளும் திருமகளும் வெல்க!

வஞ்ச மழித்திடும் நின் திருநாமம் வெல்க!



புறத்தே  புலப்படா இறைவன் அடி போற்றி!

புலன் அடக்கின் புரியும் மாயனடி போற்றி!



தர்மத்திலே உறையும் கண்ணனடி போற்றி!

தன்னிகரற்ற நம் தேவன் அடி போற்றி!


பத்தால் பார்காத்த பரமன் அடி போற்றி!

பரகாலனுக் கருளிய மன்னன் அடி போற்றி!



கோபிலாதி முனிவர் தொழும் குழந்தையடி போற்றி!

கோபால பிரய  னெந்தன் இறைவனடி போற்றி!
                   
                        - ஹரிசரண்

Comments

Popular posts from this blog