Posts

Showing posts from October, 2018
கண்ணில் ஒளியுருவே...கோபாலா ! கனித்த பேரறிவே...! பண்ணில் நிறைமதியே... கோபாலா! பனித்த உள்ளுணர்வே..! விண்ணில் கருமுகிலே....கோபாலா ! விளைந்த நெற்கதிரே...! உண்ணில் அருள்பவனே... கோபாலா! உறைந்த உயிர்பொருளே....! உன்பெயர் செவிமடுத்தால் எண்ணுள்ளம் துள்ளிக் குதிக்குதடா...! உனையே நினைந்திருந்தால் பித்துதான் ஊனில் கலக்குதடா...! அசைந்து வருகையிலே என்னிதையம் அசைவு மறக்குதடா...! அருகில் காண்கையிலே உள்ளந்தான் அமுதை ருசிக்குதடா...! கோவினம் மேய்த்து நிற்கும் கோபாலன் குழலிசையில் நாட்டம்! கோபாலன் நாமம் ஒன்றே கோபால பிரியனி னுயிரோட்டம்!                                         - ர. ஹரிசரண்
கரிய நிறத்தானவன் -  எழில்மிகு அரிய முகத்தானவன் கனித்த மனத்தானவன் - பற்றிலா தனித்த உருவானவன் கண்ணில் தெரியாதவன் - மனத்தின் பண்ணில் ஒளியானவன் வினைகள் அறுப்பானவன் - உறுபெரும் சினைகள் தானானவன் கலைகள் எல்லாமவன் - இடரறு பலைகள் வடிவானவன் இணைகள் இல்லாதவன் - ஐம்பெருந் திணைகள் ஆனானவன். சனத்தில் அன்பானவன் - உயிர்களின் இனத்தில் உயர்வானவன். வேதத்தில் உறைவானவன் -  ஒலிக்கின்ற நாதத்தில் கரைவானவன். பக்திக்கு பித்தானவன் - எட்டாத முக்திக்கு வித்தானவன். கோபாலப் ப்ரியநாதனாம் - திருமன்னை கோபாலன் கோபாலனே!                                           - ஹரிசரண் பொருள்: பலை - இடர்படும் காலங்களில் ஜபிக்கக் கூடிய மந்திரம்