இனியமொழி கேட்டிடவே காலம் வந்தது
பனிபோல துனிமறையும்  நேரம் வந்தது

ஆழ்வார்கள் அணிவகுக்கும் நிகழ்வு வந்தது
வாழ்வோர்கள் மனதிலது இனிமை தந்தது

திருமொழியும் வாய்மொழியும் செவி நிறைந்தது
கருவுணர்த்தும் பாக்கள்யாவும் காற்றில் ஒலித்தது

மாலோனின் மணிக்கழல்கள் ஆசைந்து வந்தது
மாயத்தில்  தவிப்போர்க்கு நல்லாறு வகுத்தது

மத்த வெளியில் தமிழெல்லாம் உயர்வுபெற்றது
சத்தியத்தின் நித்யஒளி இருள் மறைத்தது

வைகுந்தவாசல் திறக்கும் நேரம் வந்தது
வைகுந்த பதவியருளும் காலம் வந்தது

தெந்துவாரகை விழாவில் திளைத்து நின்றது
தென்னகமே தமிழ்சுவையில் மூழ்கி ருசித்தது

மோகம்யாவும் விட்டொழிக்க காலம் வந்தது
மோகினியாய் கண்ணன்வரும் நாளும் வந்தது

கோமகனாய் கோமேய்க்கும் கோலம் காட்டவே
கோபாலன் உளம்விரும்பும் நேரம் வந்தது

கோபால பிரியனெந்தன் மனம் கொண்டாடும்
கோபாலன் பகலிரவு பத்து நாளே!...
                                   
                                            -   ஹரிசரண்

Comments

Popular posts from this blog